awareness regarding the removal of Prosopis juliflora trees
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.
சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமாபானு பாலக்கரையில் இன்று துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்துகொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்களின் எழுத்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும்,
“கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவோம்…! நம் மண்ணின் மாண்பை காப்போம்…!” உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் நகரை வலம் வந்தனர்.
இப்பேரணியானது, பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கி சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதற்கு முன்பாக மண்ணை மலடாக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி, அட்வகேட்ஸ் அசோஸியேஷன் தலைவர் எஸ்.மணிவண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி, மற்றும் வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.