baby-shower-padalurபெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் உள்ள சமுதாயகூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 120 கர்ப்பினித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் போது அக்குடும்பத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையும் முன்னேற்றமடையும் என்ற உயர்ந்த நோக்கத்தில்தான்,தமிழக முதலமைச்சர் பெண்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். எனவே தமிழக முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்களாகிய நீங்கள் தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் இவ்வாறு பேசினார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

திருமணம் செய்யும் பெண்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப உதவித் தொகையுடன் தாலிக்குத் தங்கம் வழங்கி, பேறுகாலத்தில் உடல்நலத்தை பேணிப்பாதுகாக்க சத்துணவுகள், ஊக்கத்தொகைகள் வழங்கி, குழந்தை பிறந்தவுடன் அந்தக்குழந்தைக்குத்தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கிய குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கி தமிழக மக்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் குறிப்பாக பெண்களின் நலன்காக்கும் அன்னையாகவும் விளங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். கர்ப்பினிப் பெண்களுக்கு தங்கள் பெற்றோர் நடத்துவதைவிட சிறப்பான முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமுதாய வலைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

குன்னம் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:

தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களின் நலனிலும், வாழ்க்கை மேம்பாட்டிலும் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பெண் குழந்தைகளை வெறுக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தொட்டில்குழந்தை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி பெண்களின் வாழ்க்கையைக் காப்பாற்றி வருகின்றார்.

கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைகளை ஈன்றெடுக்க வசதியாக பணிபுரியும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால விடுப்பை 6 மாதத்திலிருந்து 9 மாதமாகவும், பேறுகாலத்தில் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கப்படும், மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானிய உதவி வழங்ப்படும் உள்ளிட்ட பல்வேறு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் இந்த தேர்தல் அறிக்கையிலே தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு உடல் நல பரிசோதனை, UV scan, இரத்தப் பரிசோதனை, உயரம், எடை ஆகியவை கண்டறியப்பட்டது. மேலும் கர்பகாலத்தில் 10 கிலோ எடை கூடுதல், சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தாய்பாலின் அவசியம், மருத்துவமனை பிரசவம், சீம்பாலின் அவசியம், மற்றும் இணை உணவு குறித்து மருத்துவ அலுவலரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் பங்கேற்ற உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகை உணவு, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் அவசியம், இணை உணவு, மருத்துவ மனையின் தொலைபேசி எண்கள், குழந்தைகளின் எடை விபரங்கள் அடங்கிய கையேடு வளைகாப்பில் பங்கேற்க உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், பாடாலூர் ஊராட்சி தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!