Citizens should be informed of the full information about cattle; Collector Request
கணக்கெடுப்பில் கால்நடைகள் குறித்த தகவல்களை விவசாயிகள் முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 20வது கால்நடை கணக்கெடுப்புப் பணிகள் கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பணியில் கால்நடை மருத்துவப் பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்முறை கருவூட்டாளர்கள் என மொத்தம் 110 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எனவே கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கால்நடைகளின் விவரத்தை கணக்கெடுப்பாளர்களுக்கு விடுபாடின்றி தெரிவிக்க வேண்டும். பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை, இதர கால்நடைகள் விவரம் கணக்கெடுக்கப்பட உள்ளன. இந்தக் கணக்கெடுப்பை பொருத்து மாவட்டத்துக்குத் தேவையான கால்நடைகளுக்கான மருத்துகள், தடுப்பூசிகள், அரசு நலத்திட்டங்கள் ஆகிவை பெறப்படும்.
தற்போதைய நிலையில் அழிந்து வரும் கால்நடைகள் விவரமும் சேகரிக்கப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்தக் கணக்கெடுப்பில் கால்நடைகள் மட்டுமின்றி உபகரணங்கள், மீன் வளர்ப்பு விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து விவசாயிகளும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள கால்நடை கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களிடம் உள்ள கால்நடைகள் மற்றும் உபகரணங்கள் குறித்த முழு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.