Fertilizer scam near Perambalur: Case registered against 3 persons for giving fake fertilizer
பெரம்பலூர் அருகே உரமோசடியில் ஈடுபட்டதாக பிரபல தனியார் தொலைக்காட்சி புதிய தலைமுறையில் வெளியான செய்தியை தொடர்ந்து, இடைத்தரகர் உட்பட மூன்று பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் போலி உரங்களை கொடுத்து சிலர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும்,போலி உரத்தால் 600 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டதாகவும் விவசாயிகள் தனியர் தொலைக்காட்சி (புதிய தலைமுறை) வாயிலாக புகார் தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் புகாரை அடுத்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, உரமாதிரியை எடுத்து பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதணை முடிவில் சிறுகுடல் விவசாயிகளிடம் விற்கப்பட்டது போலி உரம் என்பது உறுதியானது .அதைத் தொடர்ந்துஉரமோசடி செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வேளாண்மை உரஆய்வாளர் சவுமியா, மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பரிந்துரைத்தார். மேலும், வேளாண்மைதுறை சார்பில் விசாரணை செய்த விபரங்களையும் காவல்துறையிடம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் உரமோசடி குறித்து விசாரணையை துரிதப்படுத்தினர்.பெரம்பலூர் குற்றப்பிரிவு துணைக்கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் இந்த விசாரணை மேற்கொண்டு சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த இடைத்தரகர் ராமலிங்கம்,பேரளியில் உரக்கடை வைத்திருக்கும் கார்த்திக்,மற்றும் டீலர் சர்வேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீது நம்பவைத்து மோசடி செய்தல் உட்பட 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூன்று பேரும் தலைமறைவாகி விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் டீலராக கூறப்படும் சர்வேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரித்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் எந்த எந்த பகுதிகளில் போலிஉரம் வினியோகம் செய்து விற்கப்பட்டது என்ற முழுவிபரமும் தெரியவரும். போலிஸார் தலைமறைவான மூன்று பேரையும் தீவிர தேடிவருகின்றனர்.
மருவத்தூர், பீல்வாடி, சித்தளி, அருமடல், ஒதியம் உள்ளிட்ட கிராமங்களிலும் போலி உரம் விற்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மக்காச்சோளபயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து மேலும், புகார் தெரிவித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். போலி உரம் விற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீட்டு தொகையும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து பழனிசாமி அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இத்தகைய உரவிற்பனையில் ஈடுபட்டுள்ளோரை பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினரே காப்பாற்ற முயலுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 20, 2020