For the educated unemployed youth employment generation program with a grant of credit
இந்த திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தாங்கள் தொடங்க உள்ள தொழில்களில், உற்பத்தி பிரிவின்கீழ் ரூ.5 இலட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 இலட்சம் வரையிலும், தொழிற்கடன் வழங்க கேட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக கணக்கிட்டு அதிகபட்சமாக ரூபாய் 1,25,000- வரை மாவட்ட தொழில் மையம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு உத்தரவின்படி உற்பத்திப்பிரிவிற்கு தொழிற்கடனாக உள்ள ரூபாய் 5 இலட்சத்திலிருந்து ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தப்பட்டு அதற்கான மானியத்தொகை அதிகபட்சமாக ரூ.1,25,000- வரை வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1,50,000- வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் சுயமாக அரசு வழங்கும் இது போன்ற மானிய உதவியுடன் கூடிய வங்கிக்கடன் பெற்று, தொழில் துவங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும், என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.