Go to the top of the waterfall to freshen Kolli tried to sacrifice civil engineer

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவியின் உச்சிக்கு சென்று குளிக்க முயன்ற சிவில் இன்ஜினியர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 29), சிவில் இன்ஜினியர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் குடும்பத்தினருடன் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த அவர் இன்று காலை அங்குள்ள மாசிலா அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது மாதவன் மட்டும் பக்கவாட்டில் உள்ள பாறை வழியாக ஏறி அருவியின் உச்சிக்கு சென்றுள்ளார்.அப்போது நிலைதடுமாறி தவறி கீழே 30 அடி பள்ளத்தில் தடாகத்தில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாதவனுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்ப திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி காளீ்ஸ்வரி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் உயிர்பலி:

மாசிலா அருவியின் உச்சிக்கு பாறைகள் வழியே எளிதில் ஏறி சென்று விட முடியும். உச்சியில் பாறையில் பாசி படர்ந்துள்ளதால் வழுக்கி தடாகத்தில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் அருவியின் உச்சிக்கு சென்று அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.

இப்போது சிவில் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அருவியின் மேல் ஏறிச்செல்ல முடியாதபடி வேலி அமைக்கவோ அல்லது போலீசாரை நியமிக்கவோ. வனத்துறையோ அல்லது உள்ளாட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் அருவிக்கு உள்ளே செல்பவர்களிடம் தலா ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. எந்த விதமான பாதுகாப்போ அல்லது வசதிகளோ செய்து கொடுக்கப்படாத நிலையில் கட்டணம் மட்டும் எதற்காக வசூல் செய்யப்படுகிறது என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!