
Herbal Exhibition and Free Siddha Medical Camp for National Siddha Medical Day in Namakkal
நாமக்கல்லில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
சித்த மருத்துவத்தில் முதல் சித்தராக விளங்கும் அகத்திய முனிவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். இதையொட்டி கடந்து ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் தேசிய சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட சித்த மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தேசிய சித்த மருத்துவ திருவிழா நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியானது நகராட்சி மண்டபத்தில் இருந்து துவங்கி திருச்சி ரோடு, பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, பார்க் ரோடு வழியாக மீண்டும் நகராட்சி திருமண மண்டபத்தை வந்தடைந்தது. இதில் நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 10 மணிக்கு சுமார் 400 மூலிகைகள் கொண்ட மூலிகை கண்காட்சி துவக்க விழா மற்றும் இலவச சித்த மருத்துவ சிகிச்சை துவக்க விழா நடைபெற்றது.
இக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிகழ்ச்சியில் பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி வரவேற்றார். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர்,சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் உஷா, துணை இயக்குனர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.
முகாமில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் முகாமில் பங்கேற்றவர்களுக்கு வாத, தோல், வர்ம, சுவாச நோய்கள், குழந்தைகள் நல மருத்துவம், குன்ம நோய்கள், மதுமேகம் மற்றும் நிலவேம்பு, சுபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து சித்த மருத்துவ முறைகளில் சிகிச்சை அளித்தனர். முடிவில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிஉதவி மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.