In Perambalur near accident kills 4 ! 9 injured
பெரம்பலூர் அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 9 படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் ஒரு சொகுசு காரில் மதுரை நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் சந்தைப்பேட்டை பகுதியில் சென்ற போது எதிர்பாரத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தில் மோதி எதிர் திசையில் சென்றது. அப்போது அவ்வழியே வந்த ஒரு மினி லாரியின் முன் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 9 பேர் படுகாயமடைந்து விபத்துக்குள்ளான காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் எஸ்.பி.,சோனல்சந்திரா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களிலிருந்து காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கார் மற்றும் மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாடாலூர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் கண்ணயர்ந்து தூங்கியதே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள் சுயநினைவில் இல்லாததால் அவர்களுடைய பெயர் மற்றும் விவரஙகள் ஏதும் அறிய முடியவில்லை. போலீசார் இறந்த போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்களை சேகரிக்க தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.