In rainfed cotton root rot and wilt disease control methods – Agriculture sector
வேளாண் இணை இயக்குநர் சந்திரன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மானாவாரி பருத்தியானது 20,770 ஹெக்டேர் பரப்பளவில் பயரிடப்பட்டு தற்சமயம் 60 நாள் முதல் 70 நாள் பயிராக உள்ளது. தற்சமயம் நீண்ட நாட்களுக்கு வறட்சி அதனை தொடர்ந்து மழை என்ற நிலையில் பருத்தி பயிரை வேரழுகல் நோய் மற்றும் வாடல் நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.
வாடல் நோயானது பயிரின் அனைத்து நிலையிலும் தாக்கும் தன்மைகொண்டது. இச்சமயத்தில் செடியை பிடுங்கினால் வாராது மேலும் பொட்டாஷ் சத்து குறைவினாலும் இந்நோய் வரும். வேரழுகல் நோயானது இளம் மற்றும் வளர்ந்த செடியில் வரும், செடியை பிடுங்கினால் கையோடு வந்து விடும். இந்நோய்களில் இருந்து பயிரை காக்க மழைநீர் தேங்கா வண்ணம் நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும்.
இந்நோய்களிலிருந்து செடிகளை காக்க 1 லிட்டர் தண்ணீரில் பினோமில் 1.5 கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு 3 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 2 கிராம் அல்லது ரிடோமில் 1 கிராம் அல்லது நேட்டிவ்வோ 0.5 கிராம் அல்லது டிரைகோடொமா விரிடி 10 கிராம் உள்ளிட்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தி, அதனை நன்கு கரைத்து பாதிக்கப்பட்ட செடி மற்றும் அதனை சுற்றியுள்ள செடிகளின் வேர்பகுதி நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை ஊற்ற வேண்டும். மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து பருத்தியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என தெரிவித்துள்ளார்.