Namakkal: Emphasizing setting up of complainant groups to report complaints against women
பெண்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற வழிகாட்டுதல் பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் வன்முறைச் சட்டம் 2013-இன்படி பணியிடங்களில் அமைக்கப்பட வேண்டிய உள்புகார் குழுக்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர், குழந்தைகளுக்கான விடுதிகள், இல்லங்கள் வரைமுறைப்படுத்துதல் சட்டம் 2014-இன் படி பணியிடத்தில் செயல்படும் விடுதிகளைப் பதிவு செய்தல் குறித்த வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. பள்ளிபாளையம் வேர்டு இயக்குநர் சரளா வரவேற்றார்.
இதில் நூற்பாலை நிர்வாகத்தினருக்கு நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலரும் சட்டங்கள் செயல்படுத்தும் அலுவலருமான அன்பு இச்சட்டங்கள் குறித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 129 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 48 ஆலைகள், தங்கும் விடுதி வசதியை தொழிலாளர்களுக்கு அளித்து வருகின்றன. இங்கு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படுகிறதா? என்று அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 52 புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் அனைத்து ஆலைகளிலும் புகார் குழுக்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என பேசினார்.
இதில் தமிழ்நாடு அல்லியன்ஸ் கூட்டமைப்பின் நிறுவனர் பாலமுருகன்,தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை மண்டலத் துணை இயக்குநர் ரவிச்சந்திரன், பிரீடம் பண்ட் தன்னார்வ அமைப்பின் தென்னிந்திய திட்ட ஆலோசகர் ஜலீல், நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப் பிரியா, மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் திட்ட இயக்குநர் அந்தோணி ஜெனிட் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
முகாமை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தமிழ்நாடு அல்லியன்ஸ் வோர்ட், டொன்பொஸ்கோ ஆகிய தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. ராசிபுரம் டொன்பொஸ்கோ திட்ட இயக்குநர் ஆல்பர்ட் நன்றி கூறினார்.
இந்த பயிற்சி முகாமில் நூற்பாலைகளின் மேலாளர்கள், மனிதவள அலுவலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.