இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணணப்பங்களை 05.02.2016 முதல் 18.02.2016 மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் அனுப்பலாம்.

இப்பணியிடங்கள் அனைத்திற்கும் பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். காலிப்பணியிடங்கள் விவரம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.

பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாம் வகுப்பு வரைப் படித்திருக்க வேண்டும்(தேர்ச்சி (அ) தோல்வி). பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். சத்துணவு மைய கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பள்ளி சத்துணவு மைய சமையல் உதவியாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 ம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர். பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பத்தாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீக்குள் இருக்க வேண்டும்.

இப்பதவிகளுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜெராக்ஸ் நகல், இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களால் இருப்பின் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றோராய் இருப்பின் அதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து 05.02.2016 முதல் 18.02.2016 மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம், அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

18.02.2016 அன்று அலுவலக நேரத்திற்குப் பிறகு கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (அ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், விபரங்களுக்கு www.perambalur.nic.in என்ற இணையதளத்தையோ, மாவட்ட ஆட்சியரகம் (சத்துணவு) பிரிவு, 4 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!