On behalf of the DMK protest the arrest of Stalin in Chennai, Namakkal Parties road blockade to and 45 others arrested
நாமக்கல் : சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 20க்கும் மேற்பட்ட திமுக எம்எல்ஏக்களும் அமர்ந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தலைமைச்செயலகத்தில் இருந்து வெளியேற்றினர். ஆனால் வெளியே வந்த ஸ்டாலின் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பார் இளங்கோவன் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.
இதில் ஸ்டாலில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன. இந்த சாலை மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார், சரஸ்வதி, மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி,மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் மகாலட்சுமி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஈஸ்வரன், ரவீந்திரன், ரவிச்சந்திரன், சிவக்குமார், செல்வகுமார், நகர மகளிரணி பிருந்தாவனம், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை பிரபு, முன்னாள் கவுன்சிலர்கள் பூபதி, கமலம், மோகன் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.