Perambalur: B.C., M.B.C. students can apply to stay in government hostels and study; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 36 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி விடுதிகளில் 16 மாணவர்களுக்கென்றும், 10 மாணவியர்களுக்கென்றும் செயல்பட்டு வருகிறது. அதேபோன்று கல்லூரி விடுதிகளில் 4 விடுதிகள் மாணவர்களுக்கென்றும், 6 விடுதிகள் மாணவியர்களுக்கென்றும் செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர், விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமலும், அனைத்து விடுதி மாணவ, மாணவியருக்கும் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும், 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகளும், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

மேலும், கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவ, மாணவியருக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகளும், மலைப்பிரேதசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் வழங்கப்படுகிறது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 08 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/ காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை 18.06.2025-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 15.07.2025-க்குள்ளும், சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 05 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி/ கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | Non-profit Organization | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!