Perambalur judge advises transgender people to become entrepreneurs and get jobs!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லதா தலைமையில் திருநங்கைகளுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் எளம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் திருநங்கைளுக்கான நிவாரண மற்றும் அடையாள அட்டைகளை வழங்கிய நீதிபதி, சட்டம் வழங்கியுள்ள திருநங்கைகளுக்கான உரிமைகள் மற்றும் அவசியத்தினை எடுத்துரைத்தார். தங்களது மனவலிமையினை வளர்க்கும் தன்னம்பிக்கை சிந்தனையோடு கல்வியினை திறம்பட கற்றுக் கொள்ள வேண்டும். திருநங்கைகள் வேலைவாய்ப்பினை தேடும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று தொழில் முனைவோராக தங்களை உருமாற்றி வேலையை வழங்கும் நிலையை அடைய வேண்டும். இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு தொழில் நுட்பங்களை கற்று சமூக ஊடகங்கள் போன்ற இணைய வழியின் மூலமாக தங்களின் திறமைகள் அனைவரும் அறியும் வண்ணம் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் திருநங்கைகளிடம் கலந்துரையாடல் மூலம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர்கள், ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளீஸ்வரன், சிவம் அறக்கட்டளையின் இயக்குநர் சிற்றம்பலம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.