Perambalur: Farmers stage a protest with black flags, demanding that the TVK government waive loans in accordance with its Election Manifesto

தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயிகள் தலையில் முக்காடு அணிந்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கடந்த 25.05.2026 அன்று அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டம், தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாகவும், விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.தேர்தல் அறிக்கையில் சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் அதிகபட்ச வரம்புகள் மற்றும் அடுக்குமுறை (Graded system) கொண்டு வரப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடன்களுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் நஷ்டத்தில் இருக்கும் நெல் மற்றும் கரும்பு விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்களைக் காரணம் காட்டி, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் இருப்பது மாநில கூட்டுறவுச் சட்டங்களுக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் முரணானது என்பதனால் தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு கடனில் 50% தள்ளுபடியையும் உடனடியாக அரசு அறிவித்து செயல்படுத்திட வேண்டுமென வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜசிதம்பரம், மாவட்ட செயலாளர் வீ.நீலகண்டன், மற்றும் எஸ்.கே. செல்லக்கருப்பு, கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழக விவசாயிகள் கட்சி தலைவர் ராமராஜ், பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றம் கு.வரதராஜன், அதிமுக அரும்பாவூர் பேரூர் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகளும், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெண் விவசாயிகளும் கலெக்டர் ஆபீசில் நடந்த குறைத்தீர் கூட்டத்தில் தங்கள் கடனை தேர்தல் வாக்குறுதிப்படி ரத்து செய்ய கோரி மனுக்களை கொடுத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!