Perambalur: Work as Temporary Community Bank Coordinator; Collector Informs!

பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகின் கீழ் உள்ள கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள தற்காலிக சமுதாய ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளராக விண்ணப்பிக்க விரும்புவோர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர் சமுதாயம் சார்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் முழுநேரப் பணியாளராக பணி இருத்தல் கூடாது. தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும். (உரிய தகுதிகளுடன் இலக்கு மக்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில், பிற விண்ணப்பதாரர்களை கருத்தில் கொள்ளலாம்). விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும். வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராக இருத்தல் கூடாது. தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். வங்கிகளுக்கு சென்று பரிவர்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம். கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ள இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்ட்ராய்டு கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
மதிப்பூதியம், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கு மாத ஊதியம் ரூ.2,500/- வழங்கப்படும்.
விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், கல்வித்தேதி, வசிப்பிட முகவரி, கைபேசி எண் ஆகிய விபரங்களை விண்ணப்ப கடிதத்தில் தெளிவாக பிழைகள் ஏதுமின்றி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். +2 கல்வி தகுதிக்கான சான்று, வயது சான்று (ஆதார், பான் கார்டு), ஓட்டுநர் உரிமம்), முகவரிக்கான சான்று, இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்கள் விண்ணப்ப கடிதத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு மூலமாக எழுத்து தேர்வு (75 மதிப்பெண்கள்) மற்றும் நேர்முகத் தேர்வு (25 மதிப்பெண்கள்) நடத்தப்பட்டு பெறப்படும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். மேற்காணும் தகுதிகளையுடைய விண்ணப்பதாரர்கள் ‘திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தரை தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்-621212 என்ற முகவரிக்கு 29.05.2026 மாலை 5.00 மணிக்குள் நேரில் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497