Perambalur: The 123rd annual festival of the Palayam St. Arockia Matha Church began with the flag-hoisting ceremony.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் 123 வது ஆண்டுப் பெருவிழா நேற்று (1ஆம் தேதி) செவ்வாய்க் கிழமை மாலை 6மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்கு குரு அருட்திரு ரெஜிஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வாடிப்பட்டி இறை வார்த்தை சபைகுருவான, பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருட்திரு விக்டர்ரோச் திருவிழா கொடியை புனிதப் படுத்தி கொடிமரத்தில் ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலியை நடத்தினார். நிகழ்ச்சியின் போது தலைமை காரியஸ்தர் ஆரோக்கியதாஸ், காரியஸ்தர்கள் வில்லியம், இருதயராஜ், கரோல், டேவிட், பொருளாளர் நிர்மல், அருட் சகோதரிகள், அன்பியம் குழுவினர், மரியாயின் சேனையினர், மரியின் மைந்தர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பாளையம்,பெரம்பலூர், ரெங்க நாதபுரம், வேலூர், சத்திர மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு பங்கு குருக்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் மறையுரையுடன் சிறப்பு திருப்பலிகளை நடத்துகின்றனர். வருகிற 7ஆம் தேதி திங்கட்கிழமை மாலை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடை பெறுகிறது. ஆண்டுப் பெரு விழாவான 8ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை சிறப்பு திருப்பலி நடைபெற்று, கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.










kaalaimalar2@gmail.com |
9003770497