Protest in Perambalur against the Tamil Nadu Governor; District In-charge Jagatheesan’s statement!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசிய கீதத்தையும், தமிழக மக்களையும் அவமதிப்பு செய்யும் வகையில் வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி யைக் கண்டித்து பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக,
திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் இன்று நடந்து கொண்ட விதம் என்பது தமிழ்நாடு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதித்து, பாரம்பரியமாக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வை மாற்றும் முயற்சியில் ஆளுநர் நடந்து கொள்ளும் விதமாக, தேசிய கீதத்தை பாடும் வரை காத்திராமல் அதை அவமதித்து விட்டு திடீர் வெளிநடப்பு செய்துள்ளார்.
ஆளுநர் உரையை வாசித்தால் அரசின் சாதனைகளை அடுக்கடுக்காக பட்டியிலிட வேண்டும் என்பதால் ஒரு நாடகத்தை அறங்கேற்றி சென்றுள்ளார். கடந்தமுறை தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரை படிக்காமல் மறைத்தவர், இன்று ஆளுநர் உரையையே படிக்காமல் சென்றிருக்கிறார். தேசபக்தியை ஏதோ அவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளதாக நினைக்கிறார். தேசபக்தியில் தமிழ்நாட்டு மக்களை விஞ்சி ஆளுநர் கிடையாது. சட்டமன்ற அவையை அவமதித்த ஆளுநர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சருக்கோ (அ) தி.மு.க.வினருக்கோ பாடம் நடத்தும் தகுதி ஆளுநருக்கு கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் ஆளுநர் நடந்து கொள்கிறார்.
அதனால், தான் தமிழக மக்கள் ‘ஆளுநரே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்பும் சூழலை உருவாக்கி இருக்கிறார் ஆளுநர்.ஒட்டு மொத்த தமிழக மக்களை அவமதித்திடும் வகையில் செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரவியைக் கண்டித்து, தலைமை கழக ஆணைக்கினங்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில்,07.01.2025, (செவ்வாய்க்கிழமை), காலை 10.00 மணியளவில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிரனியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு , கிளை செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.