Sri anukulanatar siddar Guru pooja @ athiur
அத்தியூர் கிராமத்தில் ஸ்ரீ அனுகூலநாத சித்தர் கோயிலில் மகா குருபூஜை விழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ அனுகூலநாதர் சித்தர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் 346ம் ஆண்டு மகா குருபூஜை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு புனித கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு ஊரின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலம் வந்து கோயில் வளாகத்தை வந்தடைந்தது. பின்னர் கோயிலின் முன்மண்டபத்தில் சதுர வடிவில் அமைக்கப்படடிருந்த யாககுண்டத்திற்கு முன் கலசங்கள் வைக்கப்பட்டன.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க 18வகையான முலிகை பொருட்கள் யாககுண்டத்தில் போடப்பட்டு கணபதி ஹோமம், சித்தர்கள் ஹோமம் நடைபெற்றது. இறுதியாக மகாபூர்ணாஹதி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ அனுகூலநாதர் சித்தருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், மஞ்சள் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மண்வளம், மழை வளம், மக்கள் வளம், மற்றும் தெய்வீக வளம் வேண்டி சிறப்பு தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அனுகூல நாதர் தொண்டர்கள் இளைய பஜனை சபையை சேர்ந்த குழுவினர் செய்து இருந்தனர்.