Student failing to rescue fallen into the well, near Namakkal
நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவர் மீட்கப்பட்டார்.
நாமக்கல் அடுத்துள்ள கருங்கல்புதூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் கண்ணன் (14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.
கண்ணன் அப்பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்குச் சொந்தமான கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கிணற்றில் விழுந்து விட்டார். சுமார் 70 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்ததால், அதில் தத்தளித்து கொண்டு இருந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் மாணவர் கண்ணனை உயிருடன் மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.