the fire the roof of the house to ashes in annamangalam
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலத்தில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் தங்கம். இவர் தனது கூரைவீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன்கள் அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். தங்கம் குடியிருந்த வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை.
இந்நிலையில் இன்று மாலை மின்கசிவு காரணமாக அவரது கூரைவீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ வேகமாக பரவி வீடு முழுவதும் எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்விசிறி, கிரைண்டர், மற்றும் கட்டில் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.