பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வனப்பகுதிளில் இருந்து குடிநீர் தேடி வந்தபோது கிணற்றில் தவறி விழுந்தும், தெருநாய்கள் துரத்தி கடித்ததிலும் இரண்டு மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் தொண்டமாந்துறை வனப்பகுதியிலிருந்து 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது அன்னமங்கலம் தனப்பிரகாசம் நகர் அருகே விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பாறையில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
இதேபோல் வெண்பாவூர் வனப்பகுதியிலிருந்து 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்துள்ளது. நெய்குப்பை அருகில் வந்தபோது தெருநாய்கள் துரத்தி கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனச்சரகர் தர்மராஜ் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மான்களை மீட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.