பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே முன் விரோதம் காரணமாக இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.அதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண்பாவூரில் வசிக்கும் இருபிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு பிரிவை சேர்ந்த துரைராஜ்(22), வெங்கடேசன்(22) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பிரிவை சேர்ந்தவர்கள் தாக்கிய பிரிவினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வெண்பாவூர்- கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த திடீர் சாலை மறியலால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.