பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிடம் இன்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள், பொது மற்றும் தனியார் இடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் அடர்த்தியாக சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்த மரமானது, 100 அடிக்கும் மேலாக வேர்கள் சென்று நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால், இவை நிலத்தடி நீரை அழித்து வருகிறது.
நிலத்தடி நீர் குறைவாக உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில், குறைந்தளவிலான நீர் வளத்தையும் இந்த மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. மேலும், மேய்ச்சல் நிலம் முழுவதையும் சீமைக் கருவேல மரமானது நிறைந்துள்ளதால், கால்நடைகளுக்கு பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சீமைக் கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .