சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை ஆட்சியர், உதவி இயக்குநர் நிலையிலான பறக்கும் படை அலுவலர்கள், துணை வட்டாட்சியர் தலைமையில் நடமாடும் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுக் கூடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 தேர்வர்களுக்கு மேல் உள்ள 2 மையங்களில் வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இணையதள மையங்களும் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனிவருங்காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடைவிதிக்கப்படும் என்பதால், அனைத்து தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுத வேண்டும்.

மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்சாதனப் பொருட்கள் எதையும் கொண்டுவரக்கூடாது, தேர்வு முடியும் முன்பு தேர்வுக் கூடத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!