பாகிஸ்தான் லாட்டரியில் பல லட்சம் பரிசு விழுந்ததாக தகவல் வந்தால், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவை பொருளாதார ரீதியாக சீர்குலைக்க மறைமுக சதியில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், நமது எல்லையோர மாநிலங்களின் வழியாக கஞ்சா, அபின் ஆகியவற்றை கடத்தி, போதைப்பொருள் நடமாட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் முதலில் தொடங்கிய ஒரு புதியவகை மோசடி, இப்போது தென் மாநிலங்களை நோக்கியும் விரிவடைந்து வருவதாக இன்று தெரிவித்துள்ள மத்திய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், இந்த மோசடிக்காரர்களிடம் உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் நம்பரில் இருந்து முன்னர் ராஜஸ்தான் – பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை குறிவைத்து சில கைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.
எதிர்முனையில் உள்ள நபருக்கு (வாங்காத) பாகிஸ்தான் லாட்டரி சீட்டில் ஐந்து அல்லது பத்து லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாகவும், ஒரு வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு அதில் சில ஆயிரங்களை டெபாசிட் செய்தால் உங்கள் பரிசுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என எதிர்முனையில் பேசுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதை நம்பி அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய நூற்றுக்கணக்கான மக்கள் பல லட்சம் ரூபாய் வரை ஏமாந்ததாக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளன. இந்த நவீன மோசடி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை தாண்டி வேறு பல மாநிலங்களை குறிவைத்து விரிவடைந்து வருவதாகவும், இந்த மோசடிப் பேர்வழிகளின் மாயவலையில் சிக்கி, ஏமாறாமல் உஷாராக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.