பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நவசெல்வம். டிரைவர். இவருடைய மகள் தமிழ்செல்வி (வயது 14). 9–ம் வகுப்பு படித்து வந்தார் .
இந்த நிலையில் கடந்ம மே.10 அன்று இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால் சமையலறையில் இருந்த கண்ணாடி பாட்டில் விளக்கை எடுத்து பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த விளக்கு தவறி விழுந்ததில் கண்ணாடி பாட்டில் கீழே விழுந்து உடைந்தது.
மேலும் அதில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்எண்ணெய் சிதறி அங்கு நின்று கொண்டிருந்த தமிழ்செல்வியின் மீது பட்டதால் அவரது உடலில் தீ பற்றியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவள் அலறினார். இதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆரோக்கியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.