At Perambalur, a special camp for transgenders; It was led by the Collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்தவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட ஆவணங்களுக்கு எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றது. உங்களின் கல்விச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட சான்றுகளை உங்கள் வீட்டிலிருந்து தர மறுக்கின்றார்கள் என பலரும் இங்கு தெரிவித்தீர்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்கள் பெற்றோரிடம் பேசி உங்களது சான்றிதழ்கள் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் உங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளுக்கு கலைஞர் இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் இடம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது எங்கள் தங்கியிருக்கும் பகுதியில் சாலை வசதி குடிநீர் வசதி கழிவு வாய்க்கால், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல் சமுதாயத்தில் வட்டவர்களைப் போல நல்ல நிலைக்கு உயர உங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளுக்கு வங்கிக் கடனுதவி, அரசு மானியத்துடன் நிதியுதவி உள்ளிட்டவைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
இந்த முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வீட்டு மனை, நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 21 மனுக்களை வழங்கினர், பெறப்பட்ட மனுக்களுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவ காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பித்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 திருநங்கைகளுக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த முகாமில் சார் ஆட்சியர் கோகுல், சமூக நல அலுவலர் ரவிபாலா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.