At the time of the registration of schools, say Jaihind: The Madhya Pradesh Government Order
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் போது உள்ளேன் ஐயா என்று கூறுவதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று கூற வேண்டுமென மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் கொடியேற்றுவது கட்டாயம் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, ஆளும் ஷிவ்ராஜ் சிங் சௌகான் அரசு, நவம்பர் 1ம் தேதி முதல் வருகைப் பதிவின் போது மாணவர்கள் ஜெய்ஹிந்த் என்று கூறுவதையும் கட்டாயமாக்கியுள்ளது. முதல் கட்டமாக சட்னா மாவட்டப் பள்ளிகளில் இந்த திட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இது குறித்து அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறுகையில், நாட்டுப் பற்றை மாணவர்களிடையே உருவாக்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை எல்லா மாணவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதால், அதனை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது கலாசாரம் மற்றும் பண்பாடு, நாட்டுப் பற்றை மறந்து வரும் இளைய தலைமுறைக்கு அதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் என்றும் ஷா கூறினார்.
இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில், “மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை திணிக்கவே மாநில அரசு முயல்கிறது. நமது நாட்டை நினைத்து மாணவர்கள் பெருமைப்பட வேண்டும் என்றால், பள்ளிக் கல்வியையும், வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமே தவிர, இதுபோன்ற விஷயங்கள் நாட்டுப்பற்றை வளர்க்காது” என்று கருத்துக் கூறியுள்ளனர்