Car, Scooty collide near Perambalur: Woman killed! Another injured !!
!பெரம்பலூர் அருகே கார் ஸ்கூட்டி மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ளள அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவிச்சந்திரன் (41). இவரது அக்காவான கொளஞ்சியை தனது ஸ்கூட்டியில் வாலிகண்டபுரம் அருகே உள்ள வல்லாபுரம் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று காலை 5.40 மணிக்கு சொந்த ஊரான குன்னம் செல்வதற்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால், சென்னையில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சாமி கும்பிடுவதற்காக சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர் மல்லிகை தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (59) மற்றும் மனைவி சுமதி, மகன் மணிபாரதி உறவினர் சரண்
என்பவருடன் காரில் பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் பிரிவு அடுத்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த ரவிச்சந்திரன் ஓட்டி சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில் ஸ்கூட்டியில் பயணித்த கொளஞ்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ரவிச்சந்திரனுக்கு பின் தலையிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் ஹை வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.