பெரம்பலூர் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உலகத்திறனாய்வுத் திட்டத்தின் கீழ் உண்டு, உறைவிட பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று காலை 7.00 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சிராப்பள்ளி மண்டல முதுநிலை மேலாளர் ஆர்.கீதாஞ்சலி ரத்னமாலா இப்பயிற்சி முகாமின் நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்று நடத்தினார்.

இப்பயிற்சி முகாம் ஏப்ரல்-26-ந் தேதி முதல் மே-10-ந் தேதி வரை 15 நாட்களாக நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் 30 மாணவர்களும், 30 மாணவியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவ, மாணவியர்களுக்கு சத்தான உணவும், தங்குமிட வசதியும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் பேசியதாவது:

விளையாட்டு நமது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். உண்டு உறைவிடத்துடன் கூடிய பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ள அனைத்து வீரர் – வீராங்கனைகளும், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து நல்வழியில் பயிற்சிகள் பெற்று விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன் என பேசினார்.

இப்பயிற்சி முகாமில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாமின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுச் சீருடையும், சான்றிதழ்களும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா, கைப்பந்து பயிற்றுநர் ஆர்.வாசுதேவன், டேக்வாண்டோ பயிற்றுநர் ந.தர்மராஜன், தடகளப் பயிற்றுநர் கோகிலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!