Husband stabs wife at Perambalur court premises!
பெரம்பலூர் நீதிமன்றத்தில், இன்று காலை விவகாரத்து வழக்குத் தொடர்பாக வழக்கிற்கு ஆஜராக வந்த பெண்ணை அவரது கணவனே நுழைவு வாயிலேயே மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்டபடி குத்தியதில் மனைவி ரத்த சொட்ட சொட்ட கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா ( வயது சுமார் 44) , இவரது கணவர் காமராஜ் (வயது 49 ) இவர்களின் விவாகரத்து வழக்கு கடந்த 4ஆண்டுகளாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சுமார் காலை 10 மணிக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அரசு பேருந்தில் தனியாக வந்து சுதா இறங்கினார். அப்போது நீதிமன்ற நுழைவு வாயிலில் தோன்றிய சுதாவின் கணவர் காமராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுக்க முயன்றார். குறி தவறி முகத்தில் பட்டது. பின்னர், சராமரியாக சுதாவை கைகால் உள்ளிடட உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இந்த கத்திகுத்தால், நீதிமன்ற நுழைவு வாயிலிலேயே சுதா வலியால் அலறினார்.
இதைக் பார்த்த, காவலர்கள், வழக்கறிஞர்கள் சுதாவை காமராஜிடம் இருந்து மீட்டு காப்பாற்றினார்கள். இதில் காப்பாற்ற முயன்ற போலீசார் ஒருவருக்கும் கத்தி குத்து விழுந்தது. காமராஜிக்கும் கத்தியால் காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் மயங்கிய சுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயம் ஏற்பட்ட கணவன் காமராஜ், காப்பாற்ற சென்ற போலீசார் ஒருவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், காமராஜ், தனது மனைவியிடம் காலம் போன காலத்தில், இருவருக்கும் விவகாரத்து வேண்டாம், இரு குழந்தைகளும், கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். மனம் மாறி வரக்கோரி பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால், சுதா விடாப்பிடியாக இருந்ததால், ஆத்திரமுற்ற காமராஜ், மனம் வெறுத்து போனதாகவும், அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.