In Perambalur, Let’s Walk Get Well Program: Collector Karpagam took a walk with the people.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தின் கீழ் பாலக்கரையில் நடைபெற்றது‌ இதில் கலெக்டர் கற்பகம் மக்களோடு மக்களாக
இன்று நடைபயிற்சி செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 – 2024 சட்ட சபை அறிவிப்பில் 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளும் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் திட்டத்தினை மாவட்டங்கள் தோறும் செயல்படுத்துவோம் என அறிவித்தார். அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 04.11.2023 அன்று நடப்போம் நலம் பெறுவோம், என்னும் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து,இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்வை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு, இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்ட நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்வை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.

நடை பயிற்சி திட்டம் பாலக்கரை, சிறுவர் விளையாட்டு பூங்கா, மாவட்ட விளையாட்டு அரங்கம், கேந்திர வித்யாலயா பள்ளி-விளாமுத்தூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலக சாலை, பாலக்கரை வளைவு வழியாக, தேசிய நெடுஞ்சாலை வளைவு சென்று, சிறுவர் பூங்காவில் வந்தடையும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது பொதுமக்களிடையே தினசரி நடைப்பயிற்சி பழக்கத்தினை ஊக்கபடுத்தி, நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களிடையே உடற்பயிற்சியின்மை, உணவு பழக்க வழக்க மாறுதல், உடல் உழைப்பு குறைவு ஆகியவை அதிகரித்துள்ளதால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் நோய், நீரிழிவு நோய், இருதய நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் மன அழுத்தம் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவற்களிடம் காணப்பட்ட உயர் இரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 18 வயதிற்கு மேற்பபட்டவர்கள் 33 சதவிகிதம் அளவிற்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிறு வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கும் வந்தவர்களில் நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் நடைப்பயிற்சி இன்றியமையாததாகும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட மகத்தான திட்டமே நடப்போம் நலம் பெறுவோம் என்னும் திட்டமாகும். இது நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தனித்துவமான திட்டமாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை பருமன் சீராக பராமரிக்கப்படுகிறது, மேலும் அன்றையதினம் முழுவதும் உற்சாகத்துடன் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.

அதுமட்டுமல்ல, நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தில் தினந்தோறும் நடையிற்சி மேற்கொள்வோருக்கும், பொதுமக்களுக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று மருத்துவ குழு மூலம் சிறப்பு தொற்றா நோய்க்கான பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு தகுந்த சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டும் வருகின்றது.


அந்த வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்ட கலெக்டர் கற்பகம் தொடர்ந்து நடைபெற்று மேற்கொள்ளும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் பரிசுகளையும் வழங்கினார். பின்னர் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்காக சுகாதாரத் துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓஆர்எஸ் கரைசலை அருந்தினார்.

மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார், துணை காவல்கண்காணிப்பாளர் வளவன், அரசு மருத்துவர்கள் அரவிந்த், சேசு மற்றும் நடைபயிற்சியாளர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!