In Perambalur special medical camps for victims of degenerative muscle disease took place in
பெரம்பலூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் இன்று, அனைவருக்கும் கல்வி இயக்க மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான கல்வி திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை கல்வி அலுவலருமான க.முனுசாமி தொடங்கி வைத்தார்.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் MDCRC நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமி தலைமையில் 20 நபர்கள் கொண்ட மருத்துவகுழு 60 மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்து இந்நோய் அடுத்த தலைமுறைக்கு வராமல் தடுக்க, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இரத்த பரிசோதனை செய்தனர். மேலும், தசை சிதைவுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு, இவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கினர்.
முக்கியமாக இந்நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தினம் தசைப்பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை உருவாக்கி தருதல் போன்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இம்மருத்துவ முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இராமகிருஷ்ணன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர். சுந்தரராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலதி, சிறப்பாசிரியர்கள், முடநீக்கியல் வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.