தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
16.05.2017 இன்று தேசிய டெங்கு தினமாக அனுசரிக்கப்படுகின்றது. எனவே, டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இன்று ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ஊராட்சி, பேருராட்சி மற்றும் நகராட்சியை சேர்ந்த பணியாளர்களையும் ஒருங்கிணைத்து டெங்கு நோய் எதனால் பரவுகிறது அதை தடுக்கும் முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், பூச்சியியல் வல்லுநர்களும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது, வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்குமாறும், அப்படி மூடி வைத்தால்தான் கொசு முட்டையிடுவதை தடுக்க முடியும. மேலும் வீட்டில் அருகில், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த மண் பாண்டங்கள் தேங்காய் சிரட்டைகள் போன்றவைகளை திறந்த வெளியில் கிடக்காமல் அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்,
இவைகள் திறந்த வெளியில் கிடந்தால் மழை பெய்து அதில் நீர் தேங்கும் பொழுது ஏடிஸ் கொசு அதில் முட்டையிட்டு கொசு உற்பத்தியாவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகும் என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தற்பொழுது வெயில் காலமாக இருந்தாலும், கிடைக்கும் தண்ணீரை மூடி வைக்கவும், அதில் கொசு முட்டையிடாத வண்ணம் மூடி வைக்க அறிவுறைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளின்போது பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி, மாவட்ட மலேரிய அலுவலர் சுப்பரமணியன், கொள்ளை நோய் தடுப்பு மருத்துவர் அரவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .