Perambalur: 1156 kg Gutka, Panmasala, Coolip, which were banned by the government, were burnt and destroyed in the presence of the Collector, Police S.P.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்களை யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகின்றது. இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் தடைசெய்யப்பட்ட பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரில் பல்வேறு ஆய்வுகளின்போது பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,156 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்கள் கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் எளம்பலூர் ஊராட்சி குப்பை சேமிப்பு கிடங்கில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஆழக் குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது. முழுவதும் எரிந்த பின்னர் மீண்டும் மண் போட்டு குழி மூடப்பட்டது.
இந்நிகழ்வில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடி.ஸ்.பி. பாலமுருகன், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ மாவட்ட நியமன அலுவலர் மு.கவிக்குமார், தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.