Perambalur: 40 years in prison for impregnating a 13-year-old girl! Rs. 1 lakh fine! Court verdict!!

பெரம்பலூர் மாவட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9 -11 -2019 ஆம் தேதியன்று பிரேயரில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிறுமியை சேர்த்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், சிறுமியின் தாய் மாமன் மகன் பார்த்தசாரதி தான் கர்ப்பத்திற்கு காரணம் எனவும், சிறுமிக்கு பெற்றோர்கள் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்தசாரதி கைது செய்து சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். கருவுற்றிருந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, மகளிர் போலீசார் இந்த வழக்கினை மகிளா நீதிமன்றத்தில் நடத்தி வந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக பலமுறை பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக பார்த்தசாரதிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன் ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால், மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்கு 20 ஆண்டுகள் கடும் காவல் சிறை தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் பெரம்பலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த குற்றம் நிரூபிக்கப்படாததால், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பார்த்தசாரதியின் தந்தை கருணாநிதி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து பார்த்தசாரதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.










kaalaimalar2@gmail.com |
9003770497