Perambalur: Condemnation protest against the Chief Minister tomorrow; statement by District In-charge V. Jagadeesan!

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரி ஆ. இராசா. எம். பி. வழிகாட்டுதல்படி,
சட்டமன்றத்தில் முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை சனிக்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று – அ.தி.மு.க. சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச்செய்து ஏமாற்றி வருகிறார். திராவிட மாடல் ஆட்சி மூலமாக தலைவர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.
கொலை கொள்ளை அதிகமாகி விட்டது. போதைப் பொருள் நடமாட்டமும் பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச் செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்’ என்று மக்கள் வருந்திச்சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.
அரசியல் உலகில் அருவெறுப்பான உரை! திராவிட முன்னேற்றக் கழகத்தையும், 5 முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலை நாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில் மிசா அவசர நிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றங்களும் கண்டிருக்காது.
காற்றில் பறக்கும் சட்டமன்றத்தின் மாண்பு! அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு மரபு வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள். சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி, மீம்ஸ், ரீல்ஸ்-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்குஅவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள். இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது. தரமற்ற மனிதராக
மாறிய முதலமைச்சர்!
ஆட்சியின் தோல்விகளுக்கு பதில்சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார். இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30. மணியளவில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்டக் கழகச் செயலாளர் (எனது) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497