Perambalur: Extension of time to register child’s name in birth certificate!
பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
இந்நிலையில், ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். எனவும், 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். எனவும், குழந்தை பிறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது என்ற நிலையும் நடைமுறையில் இருந்துவந்தது.
ஆனால், தற்போது இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் மற்றும் சென்னை தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று. ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம் எனவும், இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தங்களுடைய பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்து தங்கள் நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவிகளின் பெயரில்லாத பிறப்புச் சான்றிதழில் 31.12.2024 -க்குள் பெயரினை பதிவு செய்து பிறப்புச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.