Perambalur: For the treatment of a child suffering from muscular dystrophy, Petition to the collector for Rs. 16 crores of funding!
பெரம்பலூர் மாவட்டத்தில் தசைநார் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க கோரிக்கை விடுத்து, குழந்தையின் தந்தை, உறவினர்கள், நண்பர்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் – கனிமொழி தம்பதியினர் . இவர்களுக்கு ஸ்ரீநிகா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ஸ்ரீநிகா தசைநார் செயலிழப்பு எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அக்குழந்தையால் எழுந்து நிற்கவும், நடக்கும் இயலாத நிலையில் உள்ளது. ஆகவே இதற்காக குழந்தைக்கு இரண்டு வயது முடிவடையும் முன்பு இதற்கான சிகிச்சைக்கு, ஜோல்ஜென்ஸ் மா (zolgensma) என்ற மருந்தினை செலுத்த மருத்துவர் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் மட்டும்தான் உள்ளதோடு இதன் இந்திய மதிப்பு 16கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
சாதாரன தனி மனிதனாகிய தன்னால் இந்த அளவு பெரிய தொகையை, ஏற்பாடு செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது என்றும், இதனால் குழந்தையின் உயிரை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுத்து மருத்துவத்திற்கான, நிதி உதவி செய்ய, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று குழந்தையின் தந்தை அஜித்குமார் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தனது மனுவை தமிழக முதல்வருக்கு அனுப்பி, நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குழந்தையின் தந்தை அஜித்குமார் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்ட உதவி கேட்டு, அவரது நண்பர்கள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வற்றில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.