Perambalur: How to avoid electrical accidents during monsoon? Electricity Board Notice!
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில் பொதுமக்கள் மின்விபத்துகளில் சிக்காமலும், பாதுகாத்து கொள்ளவும், மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது:
மின் பாதையில், மின் கம்பி அறுந்து கிடந்தால், பொது மக்கள் எவரும் அதனை தொடாமலும் பொது நலன் கருதி அதன் அருகில் மற்றவர்கள் யாரும் செல்லாமலும் பார்த்துக் கொண்டு உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையிலிருந்தாலோ, மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் மின் கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ, பொது மக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
மின் வாரியத்தைச் சாராத நபர்கள் எவரும் மின் தடையை சரி செய்யும் பொருட்டு மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணி செய்யக்கூடாது. மின் தடை ஏதும் ஏற்பட்டால் அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரியப் பணியாளர்கள் மூலம் மட்டுமே மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும். மின்கம்பத்திலிருந்து மின் மீட்டர் வரை செல்லும் பழுதான வீட்டு மின்னிணைப்பு ஒயர்களை மாற்றுதல் மற்றும் தனிப்பட்ட மின்தடை நீக்குதல் போன்ற செயல்களை பொதுமக்கள் மின்வாரியம் சாராத பிற பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டிராக்டர் மற்றும் லாரியில் வைக்கோல் – கரும்பு போன்றவற்றை அளவுக் அதிகமாக ஏற்றி செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை, மின்கம்பிகளை உரசாமல் மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடு முதலிய கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டுவதை தவிர்த்திட வேண்டும்.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணியினை மேற்கொள்ளும்போது மின் இணைப்பை மெயின் சுவிட்சில் மின் நிறுத்தம் செய்து, மீண்டும் உறுதிபடுத்திய பிறகு பணியை கவனமாக செய்ய வேண்டும்,
டிப்பர் லாரி மற்றும் கிரேன்களை மின்பாதைகளுக்கு அடியில் நிறுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் டிப்பர் லாரியின் பின்பகுதி மற்றும் கிரேன்களை உயர்த்தும் பொழுது மேலே செல்லும் உயர்வழுத்த மற்றும் தாழ்வழுத்து மின்பாதையினை கவனத்தில் கொண்டு கையாள வேண்டும்.
பயிர்களை விலங்குங்களிடமிருந்து பாதுகாக்க வயல்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். மின்வேலிகளில் சிக்கி விலங்ககுகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் அதிக உயிர் சேதம் ஏற்படுவதால் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்துள்ளவர்கள் பற்றி தகவல்களை பொதுமக்கள் மின்சார வாரியத்திடமோ அல்லது காவல்துறையிடமோ உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பம் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றிய தகவலை பெரம்பலூர் மாவட்டம் சார்ந்ததாக இருந்தால் பெரம்பலூர் செயற்பொறியாளர் 9445853641 மற்றும் அரியலூர் மாவட்டம் சார்ந்ததாக இருந்தால் அரியலூர் செயற்பொறியாளர் 9445853675 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் மின்பாதை, மின்கம்பிகள் சென்று கொண்டிருந்தால் அதனருகில் செல்லாமலும், மின் பாதையை தொடாதவாறு பார்த்து மிகவும் கவனமாக பணியை செய்ய வேண்டும்.
மின்பாதைக்கு அருகில் வீடு, கட்டிடம் கட்டும் போது மின்பாதையிலிருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மின்பாதையின் அருகில் செல்லாமலும் மின்பாதையை தொடாமலும் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் பொருள்களை சுமந்து செல்லும் பொழுது அருகில் உள்ள மின்பாதையினை கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக கட்டுமான பணியினை செய்ய வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வீடு, கடை, ஓட்டல் ஆகியவற்றில் வயரிங் செய்யும் போது தரமான வயரிங் சாமான்களை உபயோகித்தும் முறையான நில இணைப்பு கொடுத்தும் வயரிங் செய்யவும், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர் பொருத்துமாறும், பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றியமைத்து விபத்தினை தவிர்க்க வேண்டும் எனவும்,
மின்கம்பங்களில் விளம்பர பதாகைகளோ மற்றம் கேபிள் டிவி வயர்களையோ கட்டக் கூடாது. இதனால் மின்விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எதிர்வரும் மழை மற்றும் விழா காலம் ஆதலால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறும் மின்விபத்தினை தவிர்க்க மின்வாரியம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து மின்விபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும்படி மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பபட்டுள்ளது.