Perambalur: Lorry-van collision accident: Ayyappa devotees injured; Police investigating!
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மன்னம்பாடி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று விட்டு சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 4.45 மணி அளவில் வேன், பெரம்பலூர் மாவட்டம், திருச்சி சென்னை தேசி நெடுஞ்சாலையில், எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்ற போது, கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற லாரி திடீரென குறுக்கே வலது புறமாக தண்ணீர் பந்தல் – செஞ்சேரி பைபாசில் செல்ல திரும்பியதால், இடது புறமாக வந்த வேன் நிலைகுலைந்து பல்கர் லாரி மீது மோதியது.
இந்த திடீர் சாலை விபத்தில், வேனில் பயணம் செய்த 24 ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்து, 8 ஐயப்ப பக்தர்கள் உள் நோயாளிகளாகவும், 16 ஐயப்ப பக்தர்கள் வெளி நோயாளியாகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, வேன் ஓட்டுநரான கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினவேல் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆழபுலாவை சேர்ந்த லட்சுமணன் மகன் கண்ணன் (49) என்பவரிடம்
விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் சீர் செய்தனர்.