Perambalur: Muslims congratulate non-profit Christian school that celebrates diamond jubilee!
பெரம்பலூர் பெரியார் சிலை அருகில் உள்ள புனித தோமினிக் மேல்நிலைப்பள்ளி இந்த வைர விழா ஆண்டாக கொண்டாடி வருகிறது. 1963 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளி முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கான பள்ளியாக லாப நோக்கமின்றி இயங்கி வருகிறது. இங்கு, இந்து, முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த பெரம்பலூர், கடலூர், அரியலூர், சேலம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஹாஸ்டலில் தங்கியும், பள்ளிக்கு தினமும் வந்தும் கல்வி பயின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வைர விழா நிகழ்வு சிறப்பாக நடந்தது.
பெரம்பலூரை சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்கள் புனித தோமினிக் பள்ளிக்குச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் மவுலானா முஹம்மது முனீர் ஹஜரத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் குதரத்துல்லா, மாவட்டச் செயலாளர் முஹம்மது இலியாஸ் அலி, மாவட்ட பொருளாளர் சையது உசேன், முன்னாள் குவைத் மண்டல தமுமுகவின் பொறுப்பாளர் இஸ்மாயில், கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் முஹம்மது ஹாரிஸ், பெரம்பலூர் நகர கிளையின் செயலாளர் அப்துல் அஜீஸ் உள்ளிட்டவர்கள் பள்ளிக்கு சென்று பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்காவிடம் நினைவு பரிசுகளையும் புத்தகங்களையும் வழங்கி வாழ்த்த்துக்களை தெரிவித்தனர்.
கல்வியை காசாக்கும் நோக்கத்தோடு, தற்போது செயல்பட்டு வரும் காலத்தில், தனியார் அமைப்பு பெண்கள் வளர்ச்சிக்காக கல்வி சேவையாக அரசு நிர்ணயித்த கட்டணத்திலும், பல ஏழை எளியவர்களுக்கு இலவசமாக கல்வியை போதிப்பது பாராட்டுக்குரியது.
இந்து மத துறவிகள், தலைவர்கள் பெயரில் சிலர் கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து இந்துக்களுக்களிடமே அதிக கட்டண கொள்ளையில் ஈடுபட்டு கோடிகணக்கில் கருப்பு பணம் வைத்துள்ளதோடு, கல்வியை காசாக்கி வருவது, அத்தலைவர்களின் பெயர்களையும் கெடுப்பது போல் உள்ளது என இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் நொந்து போகின்றனர்.