Perambalur: New milk cooling center in Kunnam at Rs. 66.14 lakhs; Minister Sivashankar inaugurated!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், குன்னத்தில் ரூ.66.14 லட்சம் மதிப்பிலான புதிய பால் குளிரூட்டும் மையத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த அவர் சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் குன்னம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். அனைத்து வருவாய் கிராமங்களிலும் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் அமைத்த தமிழகத்தின் முதன்மை மாவட்டம் என்ற பெருமையினை பெரம்பலூர் பெற்றிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லாட்சியில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டமானது தூய பால் உற்பத்தியில் தொடர்ந்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் இருந்து வரும் மாவட்டமாகும். 4 வட்டங்களை மட்டும் கொண்ட நம் மாவட்டம் நாளொன்றுக்கு 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் தமிழகத்தின் முன்னோடி மாவட்டம் என்ற பெருமை கொண்டது.
பால் கூட்டுறவு சங்கங்களின் நாளொன்றுக்கு சராசரியாக 1100-லிட்டருக்கு மேல் கொள்முதல் செய்யும் தமிழகத்தின் முன்னணி மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் ஆகும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பால் சேகரிப்பு கொள்முதல் நிலையங்களில் பாடாலூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 1.00 லட்சம் கொள்ளளவும், பெரம்பலூர் குளிர்வூட்டு நிலையத்தில் நாளொன்றுக்கு 1.00 லட்சம் கொள்ளளவும், 20 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களில் நாளொன்றுக்கு 1.27 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 193 பால் சேகரிப்பு சங்கங்களில், 18,566 நபர்கள் பால் உற்பத்தியாளர்களாக உள்ளார்கள். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2,20,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., ஆனது 01.12.1964 அன்று பதிவு செய்யப்பட்டு 11.12.1964 அன்று 50 உறுப்பினர்களுடன் 45 லிட்டர் பாலுடன் துவக்கப்பட்ட சங்கமாகும். தற்போது 5,151 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
குன்னம், வரகூர், அசூர், ஆய்க்குடி, ஒதியம், அந்தூர், கரம்பியம், ஆதனூர் பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, சின்னவெண்மணி, பெரியவெண்மணி, கொத்தவால், அழகிரிபாளையம், கல்லம்புதூர் என 11 வருவாய் கிராமங்கள் 22 கறவை மையங்களை உள்ளடக்கியதாக குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 14,400 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் தலா 5,000 கொள்ளளவு கொண்ட 3 தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ரூ.51 லட்சம் மதிப்பில் குளிர்விப்பு கருவிகளும், ரூ.15 லட்சம் மதிப்பில் அதற்கான கட்டடமும் என மொத்தம் ரூ.66.14 லட்சம் மதிப்பில் இந்த பால் குளிரூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பால் உடனடி குளிர்விப்பு மூலம் தரமான பால் பாதுகாப்பு, பாலின் காப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் உறுப்பினர்களுக்கு பாலுக்குரிய விலையை உறுதி செய்தல், நவீன கருவிகளுடன் பால் பரிசோதனை வசதி, கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கும் வேகமான சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை என பல்வேறு நன்மைகள் உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் இனி பெரம்பலூரில் உள்ள குளிரூட்டும் மையத்திற்கு செல்லாமல் குன்னத்திலேயே வழங்கலாம் என பேசினார்.
பின்னர்,தேசிய பால் தினத்தை முன்னிட்டு, அதிக அளவில் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டிய அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.கலெக்டர் மிருணாளினி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் குன்னம்.சி. ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர் மற்றும் சங்க செயலாளர், பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497