Perambalur: Officials of Dharmapuri caught the one who revealed the gender of the unborn child!
கர்ப்பிணிகளின் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் கும்பலை தர்மபுரி சுகாதாரத்துறை அதிகாரிகள் காரில் துரத்தி வந்து பெரம்பலூர் அருகே பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கும்பல், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்து வருவதாகவும், அக்கும்பல் மொபைல் டீம் போல் செயல்படுவதாகவும் தர்மபுரி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் உஷார் அடைந்த தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் அந்த கும்பல் காரில் கர்ப்பிணி பெண்களை அழைத்து சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
கார் சேலத்தை கடந்து பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவரது கட்டிடத்தில் எம்ஜி மெடிக்கல் வந்துள்ளது. மெடிக்கல் மாடியில் கர்ப்பிணி பெண்களை அழைத்துச்சென்ற கும்பல் அங்கு கையடக்க ஸ்கேன் மெஷின் மூலம் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறியும் பரிசோதணையில் ஈடுபட்டது. அப்போது அங்கு வந்த தர்மபுரி சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதணை நடைபெற்ற மேல் மாடியை சுற்றி வளைத்து பரிசோதனை செய்தவரையும் 4 கர்ப்பிணி பெண்களையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் கடலூர் மாவட்டம், மங்களூர் அருகே உள்ள கட்சி மேலூரை சேர்ந்த முருகன் என்பவர் பரிசோதனைக்கு ரூ. 15ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்தும், அவர் எம்.ஏ., படித்துவிட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் கர்ப்பிணி பெண்களை விசாரித்ததில் அவர்கள் நான்கு பேருக்கும் தலா 2 பெண்குழந்தைகள் இருப்பதாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொன்ன முருகன் கைது செய்யப்பட்டு தப்பி யோடிய மூன்று ஏஜெண்டுகளை மருவத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். தேடப்பட்டுவருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூர், தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முருகன் எந்தெந்த மாவட்டங்களில் முகாம் நடத்தியுள்ளார். என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, பெரம்பலூர் மாவட்ட இணை இயக்குனர் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.