Perambalur : Scholarship for BC, MBC, DNT Class Students: Collector Information!
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. 2024-2025 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 15.10.2024 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 31.10.2024 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிப்பார்க்க கடைசி நாளாகும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தினை கல்வி நிறுவனங்கள் முறையாக சரிபார்த்து அனுப்பி வைக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ ∕ மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ ∕ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது செல்போன் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட செல்போனிற்கு வரப்பெறும். OTR Number பயன்படுத்தி 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்கலாம்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை அறிய அறிந்திட National Scholarship Portal (https://schoalrships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.