Perambalur: Special Livestock Health – Awareness Camp; Inaugurated by MLA Prabhakaran in the presence of District Trustee Committee Chairman A. Kaliyaperumal.
பெரம்பலூர் அருகே உள்ள வேலூரில், கால்நடை பராமரிப்புதுறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் , பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறையின் சாரபில், கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்துதல், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி, புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய் தடுப்பூசி, நாட்டுக்கோழிப்பண்ணைகள் அமைக்க மானியம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்தல், ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பசு மாடுகளுக்கு இலவசமாக சினை ஊசி, சினை பரிசோதனை, சினை பிடிக்காத மாடுகளுக்கு ஸ்கேன் கருவிகள் மூலம் சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் மாதிரி பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்றவாறு சிகிச்சை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கால்நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கு, கிடாரிக் கன்றுகளுக்கான பேரணி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து கருத்துக் கண்காட்சி நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட கால்நடை வளர்ப்பார்களுக்கு கால்நடை பராமரிப்பு மற்றும் வளர்ப்பு முறை குறித்து ஒலி, ஒளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இம்முகாமில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள், கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுடனும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்த முகாமில் கிடாரி பேரணி நடைபெற்றது அதில் சிறந்த கிடாரிக் கன்றுகளுக்காக அவர்களது உரிமையாளர்களுக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை பின்பற்றும் விவசாயிகளுக்கும் மற்றும் 20 கால்நடை வளர்ப்போர்க்கும் பரிசுகள் மற்றம் தீவன விதைகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்க மருந்து கொண்ட பெட்டகம் ஆகியவற்றை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினார்.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் (பொ) ஆர்.எஸ்.டி.பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர்கள் மூக்கன், குமார், ஆவின் உதவி மேலாளர் பொது மேலாளர் அன்பழகன், கால்நடை உதவி மருத்துவர்கள் நல்லுசாமி (ரெங்கநாதபுரம்), செல்வம் (சத்திரமனை), மற்றும் வேலூர் ஊராட்சி தலைவர் சரவணன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.