பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல் தொகுப்பினை அந்நாள்வரை சரிசெய்தல் மற்றும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல் தொகுப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டம் மற்றும் 2003ம் ஆண்டு குடியுரிமை விதிகளின் படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 18.01.2016 முதல் 05.02.2016 வரை நடைபெற்று வருகின்றது.
இப்பணிக்காக நியமிக்கப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு குடும்பத்திற்கும் அச்சிடப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டினைகொண்டுவருவார். அப்புத்தகத்தில் நபர்களுடைய பெயர் பாலினம் பிறந்த தேதி தந்தையின் பெயர் தாயின் பெயர் பிறந்த இடம் தற்போதைய முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் ஏற்கனவே ஆதார் எண் பெற்றிருந்தால் அத்தகவலும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்குமான மேலே குறிப்பிட்ட விவரங்கள் அப்புத்தகத்தில் அடங்கிருக்கும்.
எனவே பொதுமக்கள், கணக்கெடுப்பாளர் கொண்டுவரும் அச்சடிக்கப்பட்ட தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிலுள்ள விவரங்களை சரிபார்த்து சரியான தகல்களை அவரிடம் கொடுத்து தங்களுடைய தகவல் தொகுப்பினை சரிசெய்து கொள்ளலாம். மேலும் தங்களுடைய கைபேசி எண் குடும்ப அட்டை எண் ஆகியவற்றையும் கணக்காளரிடம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்றும், இறந்த நபர்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளனரா என்றும், குடும்பத்தில் உள்ள அனைத்து புதிய உறுப்பினர்களும் (பிறந்த குழந்தை மற்றும் குடும்பத்தில் புதிதாக வந்தவர்கள்) சேர்க்கப்பட்டுள்ளனரா என்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
புதிதாகக் குடியேறிய குடும்பத்திலுள்ள அனைவரும் கணக்கெடுப்பாளரிடமுள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டு படிவத்தில் தங்களுடைய விவரங்களைக் கொடுத்து தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் தங்களை பதிவு செய்துகொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் தயாராக வைத்திருந்து தங்கள் வீட்டிற்கு வரும் அரசு அதிகாரியிடம் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் தங்களுடைய தகவல்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து, பதிவு செய்ய ஒத்துழைக்கவும்.
என மாவட்ட ஆட்சியர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.