Perambalur : TN-ALERT app to get instant weather forecast: Collector Info!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, வடகிழக்கு பருவமழை காலத்தில் வானிலை குறித்த தகவல்களை முன்கூட்டியே பொதுமக்கள் எளிதாக உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.அலர்ட் (TN-ALERT-Mobile App) செயலியை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் எளிய முறையில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிந்து கொள்ளலாம்.
இச்செயலி மூலம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, தற்போதைய வானிலை, தினசரி மழை அளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் விவரங்கள், பேரிடரின் போது செய்யக்கூடியவை / செய்யக்கூடாதவை குறித்த அறிவுரைகள் மற்றும் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலியின் மூலம் மழை வெள்ளம் தொடர்பான புகார்கள் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
TN- ALERT செயலியை ’Google Play Store” மற்றும் ’IOS App Store”ல் இருந்து கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யலாம்.
பேரிடர் காலத்தில் எச்சரிக்கை நிலவரங்கள் குறித்து அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ள TN-ALERT Mobile-செயலியினை பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள், முதல் செயல்பாட்டாளர்கள் (First Responders), அனைத்துதுறை அலுவலர்கள், முன்கள பணியார்கள் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் (NGOs) அனைவரும் பதிவிறக்கம் செய்து பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.