Perambalur: Training camp for farmers to operate and maintain agricultural machinery and equipment!

பெருகி வரும் மக்கள் தொகையின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையிலும், உழவுத் தொழிலில் நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமன் செய்யும் வகையிலும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உழவு முதல் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் பெருமளவு வளர்ச்சி அடைந்து, இயந்திரங்களாகவும் கருவிகளாகவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை, காலத்துக்கேற்ப மேம்பாடு செய்யப்பட்டு வேளாண்மை தொழிலை எளிமையாக்கி லாபம் அடைய உதவுகிறது. வேளாண்மை பொறியியல் துறை விவசாயிகளுக்குத் தேவையான பலவகை வேளாண்மை இயந்திரங்களையும் கருவிகளையும் அரசு மானியத்துடன் வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக பலவகை வேளாண்மை கருவிகள் மற்றும் இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பயன்படுத்தும் முறை, தொழில்நுட்பங்கள் மற்றும் பழுது சீரமைப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் 09.07.2025 அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரை பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கம் எதிரில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் இம்முகாமினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்களை வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களது டிராக்டர், பவர் டில்லர், பவர் வீடர், ரோட்டவேட்டர் ஆகிய கருவிகளை முறையாக இயக்குவதற்கும், பழுது நீக்கம் குறித்த பயிற்சி அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமில் தனியார் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகளும், வேளாண்மை பொறியியல் துறை பொறியாளர்களும் கலந்து கொண்டு செயல்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளதால் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!